உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் குமரனின் 90ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு

Published On 2022-01-10 09:14 GMT   |   Update On 2022-01-10 09:14 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலையின் செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் நெசவாளரான நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதியரின் மகனாக 1904-ம் ஆண்டு திருப்பூர் குமரன் பிறந்தார்.
திருப்பூர்:

இளமையின் இனிமையை பாதியளவு கூட அனுபவிக்காமல் 28 வயதிலேயே நாட்டின் விடுதலை வேள்வியில், தன் உயிரையே விலையாக கொடுத்திருந்த கொடி காத்த திருப்பூர் குமரனின் 90-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)அனுசரிக்கப்படுகிறது.

1904-ல் பிறந்து 1932-ல் மறைந்த அந்த மாவீரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையின் செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் நெசவாளரான நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதியரின் மகனாக (குமாரசாமி இயற்பெயர்) 1904-ம் ஆண்டு பிறந்தார். நெசவுத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் அங்கிருந்து திருப்பூருக்கு இடம் மாறியது குமரன் குடும்பம்.

18 வயது நிரம்பியிருந்த குமரன் தந்தைக்கு உதவியாக அவர் நெய்த துணிகளை தலையில் வைத்துக்கொண்டு திருப்பூர் வரை சென்று கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தார். தானே சுயமாக தறிநெய்தும் குடும்பம் நடத்த முடியாமல் போகவே கணக்கெழுதும் வேலை தேடி திருப்பூருக்கே குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார் .

அடுத்த ஆண்டே குமரனுக்கு மனைவியாகவும், தாய் கருப்பாயிக்கு உதவியாகவும் அருமையான குணம் கொண்ட ராமாயியை மணம் முடித்தார் குமரன். ஆனால் தேச பக்திப்பாடல்களை பாடியபடி அது தொடர்பான ஓரங்க நாடகங்களை நடத்தியபடி திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தபடி இருந்ததால் பிரிட்டிஷ் அரசாங்க போலீசாரால் கவனிக்கும் லிஸ்ட்டில் வைக்கப்பட்டார் குமரன்.

இந்தநிலையில் 1932-ம் ஆண்டு தேசமெங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டுக்கொண்டிருந்த போது மகாத்மா காந்தியடிகளின் ‘ஒத்துழையாமை’ இயக்கம் என்கிற ஆலமரத்தின் வேர்களைத் தேடிப்பிடித்து வெட்ட பிரிட்டிஷ் போலீஸ் தீவிரம் காட்டிய உச்சகட்ட தருணம்.

ஜனவரி 10, 1932 அன்று மாபெரும் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்திருந்தனர் தேச விடுதலைப்போராளிகள். பிரிட்டிஷ் போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற வளையத்தில் இந்தியா முழுவதும் பலர் கைதாகிக் கொண்டிருந்தனர்.

தமிழகத்தின் திருப்பூரில் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல, ஊரறிந்த தனவந்தரும், பிரபலமான மனிதருமான பி.டி.ஆஷர், அவரது மனைவி பத்மாவதி ஆஷர் முன்வருவர் என தெரிந்து அவர்களையும் கைது செய்தது போலீஸ்.

எத்தனை கைது நடந்தாலும் சுதந்திரம் கேட்டுப்போராடும் தேசத்தின் மாவீரர்கள் ஊர்வலத்தை நடத்தியே தீருவது என்று முடிவு கட்டினர். ஊர்ப்பெரியவர் பி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்க, குமாரசாமி (திருப்பூர் குமரன்), ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்து செட்டியார், சுப்புராயன்,  இன்டர் மீடியட் மாணவர்கள் அப்புக்குட்டி, நாராயணன் ஆகியோர் முன்னிலையில் தேசிய கொடிகளுடன் இட்ட கோஷம் ஊர்வலம் தொடங்கிய இடத்திலேயே அதிர வைத்தது.

போலீசின் பூட்ஸ் கால்களும் நெருங்கி வந்தது. ஒவ்வொரு போராட்ட வீரர்களாய் தனித்தனியே பிடித்திழுத்து மிதிக்கத் தொடங்கின அதிகார மையத்தின் பூட்ஸ்கள். உடலில் 14 இடத்தில் எலும்பு முறிந்து, கோமா நிலைக்கு முதலில் போனது தலைமை தாங்கிய பி.எஸ். சுந்தரம். 

அடுத்து கோமா நிலைக்குப்போனது குமரனின் நண்பன் ராமன்நாயர். அடுத்தடுத்து ஒவ்வொருவராய் சுருண்டு விழ, ஒருவரின் கையிலிருந்த கொடி மட்டும் தரையை தொடாமல் வானம் பார்த்தபடி பட்டொளி வீசியது. அந்தக் கொடி, நம் தேசியக் கொடி.

‘வந்தே மாதரம்‘ என்று விடாமல் ஒலித்த குரலிலும், அதை பிடித்திருந்த விரல்களிலும், பிடிக்கும் உறுதியைக் கொடுத்திருந்த இதயத்திலும் மட்டுமே ஓரளவு ஒட்டிக் கொண்டிருந்தது உயிர். அந்த விரல்கள் குமரனின் விரல்கள். அந்த கொடியை பிடித்திருந்த விரல்களை கொடியில் இருந்து பிரிக்க முடியாமல் திணறியது போலீஸ்.

ரத்தக் குளியலில் கிடந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்தது 2 பேர். ஒன்று ராமன் நாயர், மற்றொருவர் குமரன். மறுநாள் (11.1.1932) ராமன்நாயர் மட்டும் கண் விழித்தார். குமரன் கண்விழிக்கவே இல்லை.

குமரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள் மீது போலீஸ் சொன்னதை மீறி பெருங்கலவரம் ஏற்படுத்தும் விதமாக கல்வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்ததும் அனைவரும் கைது செய்யப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டது பிரிட்டிஷ் போலீஸ்.

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்து வந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில், திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு நூலகம், படிப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குமரனின் 100-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு நினைவுத்தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. 

மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரிலே, தேசிய கொடியின் இழுக்கை போக்கிட கொடியினை கையில் ஏந்தியபடி மண்டை உடைந்து உயிர் நீத்த திருப்பூர் குமரன் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

அவரது நினைவுநாளையொட்டி திருப்பூரில் உள்ள நினைவகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்க உள்ளனர். 
Tags:    

Similar News