உள்ளூர் செய்திகள்
தொண்டி அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலை
தொண்டி அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பகுதியான சின்னத் தொண்டிக்கு செல்லும் பிரதான சாலையானது சுமார் 20 வருடங்களுக்கு முன் தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த சாலை இதுவரை பேரூராட்சி நிர்வாகத்தால் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கு பயன்படாத சாலையாக உள்ளது.
மேலும் குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டிய பேரூராட்சி நிர்வாகம், அருகில் உள்ள குளத்துக்கரையில் உள்ள சேறு கலந்த மண்ணை அச்சாலையில் கொட்டியதால், வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் வழுக்கி விழும் நிலை உள்ளது.
எனவே இந்தச் சாலையில் உள்ள மேடு, பள்ளங்களை செப்பணிட்டு அதனைத் தொடர்ந்து புதிய சாலை அமைத்து தர இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.