உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு சக போலீசார் நிதி உதவி
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை போலீஸ்காரரின் குடும்பத்துக்கு சக போலீசார் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி வழங்கினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் கரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 9 ம் தேதி கரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த மணிகண்டனுடன் கடந்த 2013 ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் விபத்தில் மணிகண்டன் பலியானது குறித்து அறிந்து வேதனைபட்டனர். மணிகண்டனின் குடும்பத்துக்கு உதவ அவர்கள் திட்டமிட்டனர்.
இதையடுத்து அவர்கள் ஒன்றிணைந்து சமூக வலைதளங்களாகிய வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ரூ.26 லட்சத்தை நிதியாக திரட்டினர். இதில் ரூ.16 லட்சத்தை மணிகண்டனின் குடும்பத்தாருக்கு வழங்கும் நிகழ்ச்சி பொத்தனூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மணிகண்டனின் பெற்றோர்கள் பெரியசாமி, சந்திராவிடம் ரூ.50 ஆயிரமும், மணிகண்டனின் மனைவி அனுசுயாவிடம் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. மணிகண்டனின் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வைப்பு நிதிக்கான சான்றிதழ்களையும் வழங்கினர்.