துறையூர் அருகே கிணற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு
துறையூர்:
துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 45) இவருக்கு திருமணமாகி மஞ்சுளா (35) என்கிற மனைவியும், பிரமிகா (17) திலக் (11) என்கிற இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று திலக் தனது நண்பர்களுடன், அதே கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக, திலக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலின்பேரில் நிலைய அலுவலர் அறிவழகன், சிறப்பு நிலை அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சென்று கிணற்றில் இறங்கி சிறுவனை பிணமாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.