உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை - போக்சோ விழிப்புணர்வில் போலீசார் எச்சரிக்கை
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்தான் போக்சோ சட்டம்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -2 சார்பில் ‘போக்சோ’ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் மாணவர்களை குழுக்களாக பிரித்து பல்வேறு பகுதிகளில் ‘போக்சோ’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
இதில் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகவள்ளி பங்கேற்று பேசியதாவது:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்தான் போக்சோ சட்டம். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள்.
தகாத சொற்களை பயன்படுத்துவது, தவறாக ஒலி எழுப்புவது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், பெண்களை தவறான எண்ணத்தில் பார்த்தல், தவறாக புகைப்படம் எடுத்தல் போன்ற தவறான செயல்கள் ‘போக்சோ’ சட்டத்திற்குள் அடங்கும்.
குழந்தைகள், பெண்களை நேரடியாகவோ அல்லது ஊடகம் வழியாக, மின்னணு சாதனங்கள் மூலமாகவோ பின் தொடர்வது அல்லது கண்காணிப்பது போன்றவைகளும் அடங்கும். சில சமயம் குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால் அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
பாலியல் தொந்தரவு அளிக்கும் நபரை தெரிந்தால் உடனே போலீசாரிடம் புகார் தெரிவிக்கவும். ஒருவர் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு செய்திருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.