உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடைமுறைகளை மக்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டும் -முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2021-12-24 14:10 GMT   |   Update On 2021-12-24 14:10 GMT
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியிருப்பதால், மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று உயர் அதிகாரிகளை அழைத்து விரிவான ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.



பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று (24.12.2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு  ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

* பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.   
* பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
* அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
Tags:    

Similar News