உள்ளூர் செய்திகள்
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாணவர்கள்-டிரைவர் மோதல்: பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம்
போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை மேலூர் செல்வதற்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. அதில் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியவாறு வந்தனர். இதனை பலமுறை நடத்துநர் கண்டித்தார்.
மாணவர்கள் பஸ்சுக்குள் வருவதற்கு மறுத்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.மாட்டுதாவணி பஸ் நிலையம் வந்தவுடன் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.