உள்ளூர் செய்திகள்
அத்திக்கடவு - அவிநாசி திட்டகுளம், குட்டைகளில் ‘சென்சார்’ கருவி
அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது.
அவிநாசி:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது.
பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, அன்னூர் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குளம், குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும், ‘அவுட்லெட் சென்சார் சிஸ்டம்‘ எனப்படும் உபகரணம் பொருத்தப்பட உள்ளது. இதை பொருத்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இக்கருவியை குறிப்பிட்ட ஒரே இடத்தில் இருந்து பொறியாளர்களால் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்து விட முடியும்.
திட்ட அதிகாரிகள் கூறுகையில், அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. குளம், குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றனர்.