உள்ளூர் செய்திகள்
கடைகளுக்கான உரிமத்தை உடனே வழங்க வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்
வியாபாரிகளை தொந்தரவு செய்யாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருப்பூர் - பல்லடம் சாலை தென்னம்பாளையம் மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள காதர் சலீம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எல்.வரதராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் என்.ஆர்.டி. வேலாயுதம், கவுரவத்தலைவர் எஸ்.வி.பூமிநாதன், பொருளாளர் யோகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர்களின் பேரவை மாநில தலைவர் அருள்ராஜ், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், மாவட்ட தலைவர் மைக்கேல், தொழிலதிபர் சவுமியாரவி கலந்து கொண்டனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட வணிகர் சங்க தலைவர் முத்துராஜ், மரியராஜ், பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் அந்தோணி, சூப்பர் ஸ்டார் மக்கள் கழக மாநில தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ், விஜயாபுரம் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் மற்றும் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சுகுமார், கவுரவ ஆலோசகர்கள் குளோபல் பூபதி, அன்பு ரமேஷ், அசன் முஹமது ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டத்தில் வியாபாரிகளை தொந்தரவு செய்யாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். சாலையோர கடைகளால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சாலையோர கடைகளை அகற்ற வேண்டும். கடைகளுக்கான உரிமத்தை வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்வதுடன் வியாபாரிகளை அலைக்கழிக்கின்றனர். எனவே உரிமத்தை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.