உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி 90 சதவீத கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துவிட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமானம் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் கோவை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி மருத்துவ கல்லூரி திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் இளஞ்செழியன், கோவை மண்டல செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் 11 பேர் கொண்ட குழு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடக்கும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறுகையில்:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. மாணவர் விடுதி, தரைத்தளத்தில் மட்டும் தற்போது கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசம் ஒப்படைக்கப்படும். முன்னேற்பாடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றனர்.