உள்ளூர் செய்திகள்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் - காமராஜர் மக்கள் மன்றம் வலியுறுத்தல்
தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் நிலை இப்படித்தான் உள்ளது.
திருப்பூர்:
மாணவ மாணவிகளின் உயிரோடு விளையாடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமராஜர் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மன்றத்தின் தலைவர் அன்னைமாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நெல்லை டவுனில் உள்ள சாப்டர் உயர்நிலைப் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 4 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை வருகின்றனர் என்கிற செய்தி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பெற்றோர்களின் மனங்களிலும் ஒரு ஆறாத வடுவாக உருமாறியுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் நிலை இப்படித்தான் உள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பன்மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது மட்டுமே இவர்களின் தலையாய பணியாக இருந்து வருகிறது.
இப்படி கூடுதல் கட்டணம் வசூலித்து தங்களது கல்லாவை நிரப்புவதில் காட்டும் மும்முரத்தை பள்ளிகளின் கட்டிட பராமரிப்பிலும் காட்ட வேண்டும்.
மேலும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நிகழாமல் இருக்க தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு பராமரிப்பின்றி இயங்கிவரும் பள்ளிகள் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.