உள்ளூர் செய்திகள்
திருப்பூர்-சோமனூர் சாலையில் ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற கோரிக்கை
குளக்கரை சாலையில் தெருவிளக்கு வசதியில்லாததால் மாலை நேரத்துக்கு பின் யாரும் அவ்வழியாக நடந்து செல்ல முடிவதில்லை.
அவிநாசி:
அவிநாசி உட்கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட மங்கலம்- சோமனூர் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
அதில் மங்கலம் வேட்டுவபாளையம் குளக்கரையின் மீது செல்லும் சாலை குறுகலாக இருக்கிறது.சாலையின் இருபுறமும் தலா ஒரு மீட்டர் உயரத்துக்கு புதர்மண்டி கிடப்பதால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் புக்குளிபாளையம் முதல் செங்கரைப்பள்ளம் பாலம் வரையில் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.குளக்கரை சாலையில் தெருவிளக்கு வசதியில்லாததால் மாலை நேரத்துக்கு பின் யாரும் அவ்வழியாக நடந்து செல்ல முடிவதில்லை.
பகல் நேரத்திலும், வாகனங்கள் வேகமாக சென்று வரும் போது பாதசாரிகள் ஒதுங்கி நிற்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில்,
சாலையின் இருபுறமும் புதர்மண்டி கிடப்பதால் யாரும் அவ்வழியாக நடந்து செல்ல முடிவதில்லை. நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நவீன கருவிகள் இருப்பதால் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதரை அடியோடு வெட்டி அகற்ற வேண்டும். மக்கள் அச்சமின்றி நடமாட வழிவகை செய்ய வேண்டும்.
ஊராட்சி நிர்வாகம் வேட்டுவபாளையம் குளக்கரை சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.