உள்ளூர் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு - அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Published On 2021-12-16 23:06 GMT   |   Update On 2021-12-16 23:06 GMT
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செமஸ்டர் தேர்வு உள்பட சில தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. அதேபோல், நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆப்லைன் (நேரடி) முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

ஆப்லைன் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அட்டவணையை மாற்றி அமைத்து, ஜனவரி 20-ந்தேதிக்கு பிறகு தேர்வு நடத்தஅறிவுறுத்தப்பட்டது. அந்தவகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த அட்டவணையை ரத்துசெய்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக காலஅவகாசம் கொடுத்து, தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.



அதில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். (இளநிலை) மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். (முதுநிலை) முழு நேர, பகுதி நேர மாணவர்களுக்கு அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக விரிவான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அரசின் உயர்கல்வித்துறை அறிவித்தபடி, ஆப்லைன் முறையிலேயே இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News