உள்ளூர் செய்திகள்
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் கடன் உதவி வழங்கியபோது எடுத்த படம்

தென்காசி மாவட்டத்தில் 1,190 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.50.16 கோடி கடன்- கலெக்டர் வழங்கினார்

Published On 2021-12-15 08:07 GMT   |   Update On 2021-12-15 08:07 GMT
தென்காசி மாவட்டத்தில் 1,190 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.50.16 கோடி மதிப்பில் வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
தென்காசி:

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நேரடி வங்கி கடன் 874 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42.77 கோடி மதிப்பிலும், நுண் நிதி கடன் 116 குழுக்களுக்கு ரூ‌.5.22 கோடி மதிப்பிலும், சமுதாய முதலீட்டு நிதி 192 குழுக்களுக்கு ரூ.2.11 கோடி மதிப்பிலும், இலங்கை அகதிகள் முகாம்களில் வசித்து வரும் குழுக்களின் சமுதாய முதலீட்டு நிதி 4 குழுக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பணிகள் அமைப்பதற்கான நிதி 3 குழுக்களுக்கு ரூ.29 லட்சம் மதிப்பிலும், சமுதாய பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ஒரு குழுவிற்கு ரூ.7 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் 1,190 சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த 15,477 உறுப்பினர்களுக்கு ரூ.50.16 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News