ஆம்பூரில் வங்கி, ஏ.டி.எம்.மில் திடீர் தீ விபத்து
ஆம்பூர்:
ஆம்பூரில் பேரணாம்பட்டு பைபாஸ் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் வங்கியில் இருந்த ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியது.
இதனை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஜன்னல் வழியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகில் இருந்த வங்கி ஏ.டி.எம்.மிலும் தீ பரவியது. அதனையும் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
ஆம்பூர் டவுன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியில் கம்ப்யூட்டர் உள்பட முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்கள் வந்த பின்னர் தான் என்ன பொருட்கள் எரிந்திருக்கலாம் என்ற விவரம் தெரியவரும்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.