உள்ளூர் செய்திகள்
தேவனூர்புதூரில் சலுகை விலை சலூன் கடை மீது பரபரப்பு புகார்
விரைவாக வடமாநில நபர்கள் நடத்திவரும் சலூன் கடைக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மடத்துக்குளம்:
உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் சலூன் கடையை கடந்த சில மாதங்களாக நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட சலூன் கடையில் சலுகை விலை அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேவனூர்புதூர் பகுதியில் உள்ள மற்ற கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த நபரிடம் தெரிவித்தும் தொடர்ந்து சலுகை விலையில் கடையை நடத்தி வருகின்றனர். எனவே அந்த கடையை மூடக்கோரி தேவனூர்புதூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் உடுமலை நகர செயலாளர் பொதிகை தங்கவேலு தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் செழியன் கூறுகையில், விரைவாக வடமாநில நபர்கள் நடத்திவரும் சலூன் கடைக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.
மனு கொடுக்கும் போது மாநில தலைமை கழக பேச்சாளர் கனகராஜ், மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆலோசகர் துரைசாமி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.