உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மருந்து கடை ஊழியரை வெட்டி பணம் பறித்த 2 பேர் சிக்கினர் - காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவம்பாளையம் முருகம்பாளையத்தை சேர்ந்தவர் சேதுபதி (வயது 45). இவர் வஞ்சிபாளையத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சங்கர் என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இருவரும் கடையை பூட்டி விட்டு ரூ.1.50 லட்சத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இடுவம்பாளையம் அருகே செல்லும் போது மர்மநபர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பணத்தை பறித்து சென்றது முருகம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் அவரது நண்பர் சிறுபூலுவபட்டியை சேர்ந்த இசக்கி பாண்டி(25) என்பது தெரியவந்தது.
இசக்கிபாண்டி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து மருந்து கடை உரிமையாளர், ஊழியர் இருவரையும் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பிய அவர்கள் திரு வண்ணாமலையில் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இசக்கிபாண்டி வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்தநிலையில் மருந்து கடை உரிமையாளரிடம் பணம் பறித்தது தொடர்பாக சிறையில் உள்ள 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திருப்பூர் வீரபாண்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.