உள்ளூர் செய்திகள்
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 பேரூராட்சிகளில் மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது.தளி, கணியூர் பேரூராட்சிகளில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.
இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் பேசுகையில்,
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர்வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன.
மேலும் உடுமலை வட்டம் அணிக்கடவு கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சின்னச்சாமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கூட்டுறவுத் துறை மூலம் 20 விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர்கீதா, வட்டாட்சியர்கள் ராமலிங்கம் (உடுமலை), ஜலஜா (மடத்துக்குளம்) மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.