உள்ளூர் செய்திகள்
விவசாயிகளிடம் வரவேற்பு இல்லாததால் வாடகைக்கு விடப்பட்ட அவிநாசி ஒழுங்குமுறை விற்பனை கூட குடோன்கள்
தொடக்கத்தில் ஓரளவு விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்ற நிலையில் நாளடைவில் நீர்த்துப்போனது.
அவிநாசி:
அவிநாசி அருகே புதுப்பாளையம் செல்லும் வழியில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது.
இங்கு ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கடந்த 2014ல் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்பட்டது.விவசாய விளை பொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன நிலையமும் அமைக்கப்பட்டது.
விற்பனை கூட செயல்பாடுகளை பிரபலப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி பிரதிவாரம் புதன், வியாழன் தோறும் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம், செவ்வாய் தோறும் பருத்தி ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடக்கத்தில் ஓரளவு விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்ற நிலையில் நாளடைவில் நீர்த்துப்போனது. இதனால் இங்குள்ள கிடங்கை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வாடகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம்.
தங்களது விளைப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே கிடங்கு, தமிழ்நாடு காகித ஆலையின் கிடங்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாதம் ரூ.4.50 லட்சம் வரை வாடகை பெறப்படுகிறது. அதே போன்று அங்குள்ள மற்றொரு கிடங்கு பழங்களை ஏற்றுமதி செய்யும் ஒருவருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.