செய்திகள்
கிணறு சீரமைப்பு பணியில் தொழிலாளி மண்ணில் புதைந்து பலி

கிணறு சீரமைப்பு பணியில் தொழிலாளி மண்ணில் புதைந்து பலி

Published On 2021-11-27 10:43 GMT   |   Update On 2021-11-27 10:43 GMT
போடி அருகே கிணறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்ணில் புதைந்து பலியானார். இது குறித்து அவரது உறவினர்கள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலச்சொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது40) கூலித்தொழிலாளி. இவர் போடி-மூணாறு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்த மான ஒரு தோட்டத்தில் சீரமைப்பு பணிகளை இன்று மேற்கொண்டு வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தில் இருந்து கிணற்றை தூர்வாரி அதில் இருந்த மோட்டாரை வெளியே எடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய பெரியகருப்பன் மோட்டாரை எடுத்து விட்டு மேலே ஏறியபோது பக்கவாட்டு சுவரை பிடித்தார். பலம் இழந்த நிலையில் இருந்ததால் அந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் பெரியகருப்பணும் அவருடன் இருந்த பத்திரகாளிபுரத்தை சேர்ந்த உதயசூரியன் (55) என்பவரும் புதைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பெரியகருப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். உதயசூரியனை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பாதுகாப்பற்ற கிணற்றில் எந்தவித உபகரணங்களும் வழங்காமல் வேலைக்கு அமர்த்தியவரை கண்டித்து தொழிலாளர்கள் மற்றும் பெரியகருப்பனின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டடனர். உரிய இழப்பீடு வழங்காவிட்டால் உடலை எடுத்துச் செல்லமாட்டோம் என அவர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


போடி டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News