செய்திகள்
டிஜி லாக்கர் மூலம் தொழிலாளர்கள் ஆவணங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் - ஒடிசா வேலைவாய்ப்பு அதிகாரி அறிவுறுத்தல்
சேவை மையம் சார்பில் புதிய திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் ஒடிசா தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் - காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தில் இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் இயங்குகிறது. இந்த மையம் மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி முடிக்கும் ஒடிசா தொழிலாளரை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணி அமர்த்தி வருகிறது.
சேவை மையம் சார்பில் புதிய திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் ஒடிசா தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் முகாம் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநில வேலை வாய்ப்பு அதிகாரி ஆதித்யா பிரதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அனைத்து தொழிலாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா?, இ.எஸ்.ஐ., பி.எப்., திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? என ஆய்வு நடத்தினார்.
தொழிலாளர்கள், ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை டி.ஜி. லாக்கர் செயலியில் பதிவேற்றம் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதன்மூலம் ஒரிஜினல் ஆவணங்கள் தொலைந்து போவது தவிர்க்கப்படும்.
எந்த ஒரு ஆவணத்தையும் எந்த இடத்திலும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு அதிகாரி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார். முடிவில் ஒடிசா சேவை மைய மேலாளர் நன்றி கூறினார்.