செய்திகள்
பல்லடத்தில் தொழில் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை
கார்த்தி பல்லடம் பஸ் நிலைய மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் ரோடு சங்கரலிங்கனார் வீதியில் வசிக்கும் மோசஸ் மகன் கார்த்தி (வயது23). இவர் பல்லடம் பஸ் நிலைய மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சமீபகாலமாக சரியான வியாபாரம் இல்லாமல் பிரியாணி கடையை நஷ்டத்தில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடையில் வேலைக்கு இருந்த ஆட்களை நிறுத்தி விட்டு அவரது தாய் ராணியை கடையில் உதவியாளராக வைத்துக்கொண்டார்.
இருப்பினும் போதுமான வருமானம் இல்லாததால் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவருக்கும் தாய்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கடைக்கு வருமாறு தாயை அழைத்தபோது அவர் வர மறுத்து நான் வேறு எங்காவது போய் வேலை செய்கிறேன். வீட்டில் செலவுக்கு கூட பணம் இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.