செய்திகள்
கோப்புபடம்.

சிறுமியை கடத்தி திருமணம் - மினி பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது

Published On 2021-11-20 08:04 GMT   |   Update On 2021-11-20 08:04 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார் .பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பல்லடத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். 

கிராமத்தில் இருந்து பல்லடம் வருவதற்கு மினி பஸ் மூலம் வந்து செல்வார், அப்போது மினி பஸ் நடத்துனராக இருந்த மகேஷ் குமார் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகேஷ் குமாருக்கு ஏற்கனவே ஸ்ரீதேவி என்பவருடன் திருமணம் ஆகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதனை மறைத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி காதலிப்பதாக நடித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய சிறுமியும் அவரிடம் பழகி உள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார். 

பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். விசாரணையில் சிறுமி மகேஷ்குமாருடன் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்த போலீசார் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை செய்யப்பட்டு சிறுமியை கடத்திச் சென்ற மகேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News