பேராவூரணியில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவரது மகன் மணிகண்டன் வயது (28), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, வேலை முடிந்து பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் குளிப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது கால் தவறி குளத்திற்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மணிகண்டன் தண்ணீரில் இறந்து மிதப்பது கண்டு கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
மேலும், தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், மகேந்திரன் ஆகியோர் மணிகண்டன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.