செய்திகள்
குடவாசல் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலை
குடவாசல் அருகே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் வடமட்டம் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக குடவாசல் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு வடமட்டம், பரவக்கரை, சற்குணேஸ்வரபுரம், அன்னியூர் ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை இந்த சாலை வழியாகத்தான் விற்பனைக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் சாலை மோசமாக இருப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.