செய்திகள்
கோப்புபடம்

டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

Published On 2021-11-07 08:59 GMT   |   Update On 2021-11-07 08:59 GMT
முத்துக்குமார் டாஸ்மார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட நபர் முத்துக்குமாரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று பாருடன் செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் 50 வயது மதிக்கத்தக்கஒருவர் இறந்து கிடந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் இதை பார்த்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த உடலை மீட்டு போலீசார் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இந்தநிலையில் டாஸ்மாக் பாருக்கு அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் முத்துக்குமார்(வயது47) என்பதும் திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு முத்துக்குமார் டாஸ்மார்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட நபர் முத்துக்குமாரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார் கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News