செய்திகள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊதிய வழங்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய நிலுவைத் தொகையை விடுவிக்காததால் 1,178 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கப்படாததால் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.