செய்திகள்
கைது

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது

Published On 2021-10-30 13:22 GMT   |   Update On 2021-10-30 13:22 GMT
கோட்டூர் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் போலீஸ் தேடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்:

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது63). இவருக்கு கோட்டூர் அருகே உள்ள கர்ணாவூர் கிராமத்தில் ரோடு அருகில் வயல்கள் உள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு வயல்களில் நடவு வேலை நடைபெற்றதை அஞ்சம்மாள் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் அஞ்சம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து அஞ்சம்மாள் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் முத்துப்பேட்டை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில் பெருகவாழ்ந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபரை தேடிவந்தனர். 

சம்பவத்தன்று கருணாவூரிலிருந்து முத்துப்பேட்டை வரை ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வேதாரண்யம் கடைவீதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தலைஞாயிறு திருமாளம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் கட்டரமேஷ் (23) என்பதும், அஞ்சம்மாளிடம் சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கட்ட ரமேசை கைது செய்து அவரிடம் இருந்த 7 பவுன் சங்கிலியை மீட்டனர்.
Tags:    

Similar News