குழித்துறையில் ரெயில் மோதி தொழிலாளி பலி
நாகர்கோவில்:
குழித்துறை ரெயில்வே ஆற்றுப்பாலத்தில் ரெயில் தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக இன்றுகாலை நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் குமார் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்பு தண்டவாளத்தில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் பிணமாக கிடந்தவர் மார்த்தாண்டம் கோட்டைகாட்டுவிளையை சேர்ந்த பழனி (வயது55) என்பது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ரெயில்மோதி இறந்த பழனிக்கு இன்னும் திருமணமாகவில்லை. கூலிவேலை பார்த்து வந்த அவர், தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ரெயில் மோதி இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பழனியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.