ராதாபுரத்தில் தள்ளுபடி விலையில் கார் தருவதாக டிரைவரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பெத்தரெங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது37). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன.
கார் டிரைவரான வில்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செல்போனில் முகநூலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரம் வந்து உள்ளது. ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் சிறப்பு தள்ளுபடி விலையாக ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது என்று இருந்தது.
இதனை உண்மை என நம்பிய வில்சன் அதில் வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அடுத்த நிமிடமே அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர்புறம் பேசிய நபர் முதல் தவணையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் வில்சன் அதனை முழுமையாக நம்பவில்லை. உடனே எதிர்புறம் பேசிய நபர் ஆதார் அட்டை மற்றும் அவரது அலுவலகம் குறித்த வீடியோ ஆகியவற்றை வில்சனின் வாட்ஸ்அப்-க்கு அனுப்பினார்.
இதனால் வில்சன் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்தை அந்த மர்மநபர் அனுப்பிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாதம் ஒருமுறை ஒவ்வொரு காரணங்கள் கூறி ரூ.6½ லட்சம் வரை வில்சனிடம் இருந்து அந்த மர்மநபர் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் வில்சன் பலமுறை போனில் அழைத்தும் மர்மநபர் போனை எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வில்சன் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பணமோசடி செய்த மர்மநபரை தேடி வருகின்றனர்.