செய்திகள்
பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற தனியார் பள்ளி நிர்வாகி கைது
ஆலூத்துபாளையம் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம், ஆலூத்துபாளையம் பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆலூத்துபாளையம் பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 62) என்பதும் வடுகபாளையத்தில் நர்சரி பள்ளி நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள், அவற்றை விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தனியார் பள்ளி நிர்வாகி மதுபானம் விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.