செய்திகள்
கட்டுக்குள் வரும் கொரோனா - கட்டுப்பாட்டு மண்டலம் இல்லாத நகரமாக மாறும் திருப்பூர்
தற்போது மாவட்டத்தில் 6 கட்டுப்பாட்டு மண்டலம், மாநகராட்சி பகுதியில் 2 என மொத்தம் 8 தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே உள்ளது.
திருப்பூர்:
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மாநகராட்சியில் 40 இடங்கள், மாவட்டத்தில் 80 இடங்கள் என 120 கொரோனா கட்டுப்பாட்டு (தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக) மண்டலமாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து தடுப்பூசி செலுத்தியதன் பயனாக மாவட்ட கொரோனா பாதிப்பு மெல்ல சரிய தொடங்கியுள்ளது. அவ்வகையில், மாவட்டத்தில் அக்டோபர் மாத தொடக்கம் முதல் ஒரு நாள் பாதிப்பு 100 - ஐகடந்து பதிவாகவில்லை.
இதனால் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை குறைந்து ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், தற்போது மாவட்டத்தில் 6 கட்டுப்பாட்டு மண்டலம், மாநகராட்சி பகுதியில் 2 என மொத்தம் 8 தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மட்டுமே உள்ளது. மீதமுள்ள பகுதியில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை கருதி இப்குதிகள் கட்டுடுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி விட்டால், மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலம் இனி இல்லை என்ற சூழல் வரும் என்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,455 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 823 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 74 பேர் வீடு திரும்பினர்.இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92, 664 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில்கொரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது வரையில் 967 பேர் உயிரிழந்துள்ளனர்.