மேச்சேரி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது60). விவசாயி. இவரது உறவினர் கருப்பண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மணியும், கருப்பண்ணனும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார்சைக்கிளை கருப்பண்ணன் ஓட்டினார். மணி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்து கீழே தள்ளினார்.
இதில் கருப்பண்ணன், மணி ஆகியோர் கீழே விழுந்தனர். உடனே 2 பேரையும் முத்துக்குமார் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கருப்பண்ணன், மணி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் முத்துக்குமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி மணி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முத்துக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.