செய்திகள்
நமக்கு நாமே திட்டம் - தன்னார்வலர்களை தேடும் அதிகாரிகள்
திட்ட மதிப்பீட்டு தொகையில் பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகை செலுத்த வேண்டும்.
திருப்பூர்:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு, விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்கம் மற்றும் மேம்பாடு, எல்.இ.டி., விளக்கு கம்பங்கள், ‘சி.சி.டி.வி.,’ கேமரா பொருத்துதல்.
மேலும் பாதுகாப்பு வளையங்களுடன் மரக்கன்று நடுதல், அரசு பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை செய்து கொள்ள முடியும்.
திட்ட மதிப்பீட்டு தொகையில் பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகை செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை அரசு வழங்கும்.
பெரும்பாலான அரசு துவக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நூலகம், அரசு மாணவர் விடுதி உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
பல இடங்களில் கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. இப்பணிகளுக்கென அரசின் பிரத்யேக நிதி ஒதுக்கீடு இல்லாததால் அரசு அதிகாரிகள், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பணிகளை செய்து முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை பெற தன்னார்வ நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட நன்கொடையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தன்னார்வலர்களிடம் நன்கொடை பெறும் பணிகள் நடைபெறுகிறது.