செய்திகள்
கோப்புபடம்

27-ந்தேதிக்குள் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு

Published On 2021-10-15 07:31 GMT   |   Update On 2021-10-15 07:31 GMT
பள்ளிகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டார்.
திருப்பூர்:

அனைத்து தொடக்க நிலை வகுப்புகளும் 27ம் தேதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டுமென தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர்1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

பள்ளிகள் தோறும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டார். அதில், நீண்ட இடைவெளிக்கு பின் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்பதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கையை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். 

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகள் தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம். வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

வருகிற 27-ந்தேதிக்குள் 100 சதவீத பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News