செய்திகள்
துணி எடுப்பது போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரின் செல்போனை திருடியவர் கைது
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துக்குளம் மெயின் ரோடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த நபர் ஒரு உள்ளாடை எடுத்துவிட்டு ரூ.150 பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்போது மேஜையின் மீது வைத்திருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரிமையாளரின் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முஜிபூர் ரஹ்மான் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பார்த்தபோது அவரது பாக்கெட்டில் செல்போன் இருந்துள்ளது.
விசாரித்தபோது அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் ரஞ்சித்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து முஜிபூர் ரஹ்மான் கணியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.