செய்திகள்
கிடாரிப்பட்டி கண்மாய் நிரம்பி சாலை வழியாக பெரியாறு கால்வாய்க்கு சென்றது

மேலூர் கொட்டாம்பட்டி பகுதிகளில் கனமழை- கண்மாய்கள் நிரம்பின

Published On 2021-10-06 06:53 GMT   |   Update On 2021-10-06 06:53 GMT
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
மேலூர்:

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.

மதுரை அழகர்கோவில் மலையில் பெய்த கனமழையால் கிடாரிப்பட்டி முனிச்சான் கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீர் சாலை வழியாக பெரியாறு கால்வாயில் கலந்தது.

கொட்டாம்பட்டி யூனியன் மங்களாம்பட்டியில் நேற்று பெய்த மழையால் அந்த ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன், சிகப்பி உள்பட 3 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

மதுரை நகரிலும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் நிலையம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் தண்ணீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News