செய்திகள்
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

10 - ம்வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

Published On 2021-10-04 12:29 GMT   |   Update On 2021-10-04 12:29 GMT
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 

அதேநேரம் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என, மேல்படிப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் அந்தந்த பள்ளிகளின் இணையதள முகவரி வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
Tags:    

Similar News