செய்திகள்
விபத்து

எட்டயபுரம் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்- டிரைவர் பலி

Published On 2021-09-30 09:44 GMT   |   Update On 2021-09-30 09:44 GMT
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நள்ளிரவில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிவ விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்டயபுரம்:

திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நாகர்கோவில் நோக்கி சென்றது. லாரியை திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி சென்றார்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் அருகே சென்ற போது லாரி பழுதாகி சாலையில் நின்றது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்த கல்மாவு பவுடர்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி தூத்துக்குடிக்கு சென்றது. இதனை மதுரை மேலூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார். மாரிமுத்து ஓட்டி சென்ற லாரி, பழுதாகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் வந்த லாரியின் முன்பகுதி உடைந்தது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மாசார்பட்டி போலீசார் படுகாயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரிமுத்து இடிபாடுகளில் சிக்கியதால் அவரது உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News