செய்திகள்
ராமேசுவரம் வரும் வடமாநில பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
ராமேசுவரம் வரும் வடமாநில பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று குறைந்து வருகின்றது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வர தொடங்கி விட்டனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரும் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையம் அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு சுகாதாரத் துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. அங்கு அந்த வாகனத்தில் வரும் வட மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கும் சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்தான் பக்தர்கள் ராமேசுவரம் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்களிடம் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடாத நபர்களிடம் தடுப்பூசி போட வைத்து அதன் பின்னர்தான் வாகனங்களை உள்ளே அனுமதித்து வருகின்றனர். இதனிடையே வெளி மாநிலத்தில் இருந்து நேற்று வாகனங்களில் வந்த வட மாநில பக்தர்களை சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். கொரோனா பரிேசாதனை செய்த போது பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். எனவே சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.