செய்திகள்
திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

மகாசபை கூட்டத்தையொட்டி திருப்பூர் தினசரி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2021-09-22 10:51 GMT   |   Update On 2021-09-22 10:51 GMT
மகாசபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த வியாபாரிகள் சங்கத்தினர் சிலர், மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடப்பதால் இன்று கடை விடுமுறை என அறிவிப்பு பலகை வைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. 65 கடைகள் உள்ளன. ஒரே பதிவு எண்ணுடன் (39/2011) இந்த மார்க்கெட்டில் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என இரண்டு சங்கங்கள் செயல்படுகின்றன. 

இவர்களில் ஒரு பிரிவினர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டு இன்று 22-ந்தேதி மகாசபை கூட்டம் நடத்த வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர். 

மற்றொரு சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தினசரி மார்க்கெட் நுழைவு வாயிலில் 400 வியாபாரிகள் நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு சங்கத்தின் மகாசபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே இன்று அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு பலகை வைத்தனர். 

மகாசபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த வியாபாரிகள் சங்கத்தினர் சிலர், மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடப்பதால் இன்று கடை விடுமுறை என அறிவிப்பு பலகை வைத்தனர். இரு பிரிவு வியாபாரிகள் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தநிலையில் இன்று மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் மகாசபை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் கடைகளின் தரைத்தளத்தில் உள்ள கடைகளை ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News