செய்திகள்
விபத்து பலி

ராமேசுவரம் அருகே சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது- வாலிபர் பலி

Published On 2021-09-21 09:06 GMT   |   Update On 2021-09-21 09:06 GMT
ராமேசுவரம் அருகே சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கார் ஒன்றில் 5 வாலிபர்கள் தங்கச்சிமடம் நோக்கி சென்றுள்ளனர். இந்த காரை செட்டியதெருவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் மகன் புகாரி (வயது 23) ஓட்டியுள்ளார். காரில் அவருடன் நண்பர்கள் சேசாங், சிவாங்தியாகி, வேப்பூ, அபிமன்யு ஆகிய 4 பேர் இருந்துள்ளனர்.

அந்த கார் ராமேசுவரம் அருகே உள்ள மெய்யும்புளி சாலை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த தண்ணீர் லாரி மீது மோதியதோடு 2 முறை உருண்டு மின்கம்பம் அருகே நின்றது.

இந்த விபத்தில் கார் நொறுங்கியது. காருக்குள் இருந்த அபிமன்யு (18) என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் அருகே உள்ள இடுக்கி என்ற பகுதியை சேர்ந்தவர். தங்கச்சிமடம் பேக்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகாயம் அடைந்த மற்ற 4 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News