செய்திகள்
குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் மறுப்பு - தவிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்
அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை, பனியன் கம்பெனி ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர்.
திருப்பூர்:
அங்கன்வாடியில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செப்டம்பர் 1 முதல் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு வரவழைத்து மதிய உணவு வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
ஆனால் குழந்தைகளை மதிய உணவு நேரத்தில் அழைத்துவர பெற்றோர் மறுப்பதால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:-
அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை, பனியன் கம்பெனி ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர். மதிய உணவுக்காக நேரம் ஒதுக்கி குழந்தைகளைஅழைத்து வர இயலாது என்கின்றனர். குழந்தைகள் யாருக்காவது சளி, இருமல் இருந்தால் இதர குழந்தைகளுக்கும் பரவிவிடும் என அச்சப்படுகின்றனர்.
குழந்தைகளை அனுப்ப மறுப்பதால் சமைத்த உணவு, முட்டை உள்ளிட்டவை வீணாகின்றன. எனவே வழக்கம் போல் அங்கன்வாடிகள் செயல்படும் வரை பெற்றோரிடமே உணவு பொருட்களை வழங்கும் பழைய நடைமுறையை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.