செய்திகள்
அதிகாரிகள் அதிரடி சோதனை - திருப்பூர் ஓட்டல்களில் 35 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
5 கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த தடை செய்த பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2,000 வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள அசைவ ஓட்டல்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பல்லடம் ரோடு கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமாக பராமரிக்கப்படாத 17 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் 5 கடைகளில் தரம் குறைவாக இருந்த 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. சரியாக மூடி வைக்காத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த 10 கிலோ இஞ்சி, பூண்டு பேஸ்ட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். 5 கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த தடை செய்த பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2,000 வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சரிவர பின்பற்ற வேண்டும். சூடான உணவு பொருட்களை, பாலிதீன் காகிதங்களில் பார்சல் செய்யக்கூடாது. உணவு பாதுகாப்புத்துறையில் பெற்ற சான்றிதழை பார்வைக்கு தெரியும் வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
உணவு கலப்படம் மற்றும் உணவின் தரம் தொடர்பான புகார் இருந்தால் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் 94440 42322 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் புகார் செய்யலாம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.