செய்திகள்
பல்லடம் கடைகளில் திருட்டு - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடற்கரை மேடு பகுதியில் உள்ள ரவி என்பவரின் துணிக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ளது கொடுவாயில் மருந்து கடை நடத்தி வருபவர் சரவணகுமார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .
அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதேபோல அருகில் உள்ள ஆதிசங்கரன் என்பவரின் மருந்து கடை பூட்டும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.600திருடப்பட்டிருந்தது.
இதேபோல கடற்கரை மேடு பகுதியில் உள்ள ரவி என்பவரின் துணிக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. அந்த கடை அருகில் உள்ள குணசேகரன் என்பவரின் மளிகைக்கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
அதன் அருகில் உள்ள செல்போன் கடையில் பூட்டை உடைத்து, 3 செல்போன்கள், 1 கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.