செய்திகள்
புதுச்சத்திரம் அருகே ஆம்னி வேன் மோதி தொழிலாளி பலி- டிரைவர் கைது
புதுச்சத்திரம் அருகே ஆம்னி வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 29). இவர் புதுச்சத்திரம் அருகே நாட்டாமங்கலத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அருள்குமார் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அவருடைய நண்பர் அருளுடன் புதுச்சத்திரத்திற்கு சென்றார். அங்கு இருவரும் டீ சாப்பிட்டு விட்டு மீண்டும் நாட்டாமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்குமார் படுகாயம் அடைந்தார். அருள் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அருள்குமாரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் டிரைவரான சேலத்தை சேர்ந்த சரவணனை (30) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.