செய்திகள்
மாணவர்கள் உடல் நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு
எவருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் பள்ளியில் உள்ள அனைவரும் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
உடுமலை:
கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க, தினமும், தீவிர கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து தமிழகத்தில் 9 முதல், பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் நிலையை தீவிரமாக கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உடுமலை பகுதி பள்ளிகளில் எவருக்கேனும் உடல்சோர்வு, காய்ச்சல் என தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் பயன்படுத்தி அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.
இதுகுறித்து உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி கூறுகையில்:
எவருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் பள்ளியில் உள்ள அனைவரும் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். நோய்ப்பரவலை தடுக்க, தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.