செய்திகள்
மாநகராட்சி பகுதிகளில் 138 இடங்களில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்
அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 700- க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாகவும், 100 சதவீத தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக மாற்றும் வகையிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினமும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாநகராட்சியில் காலை 7 மணி முதல் மாலை 7 வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகளில் என 138 இடங்களில் அமைக்கப்பட்டு சுமார் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாமில் மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே மாநகராட்சி பகுதியில் உள்ள முதியோர், கல்லூரி மாணவ-மாணவியர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி தாய்மார்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுகொண்டுள்ளார்.