பொள்ளாச்சி அருகே இன்று அரசு பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து பலி
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. நெடுஞ்சாலைத்துறை ஊழியர். இவரது மகள் சிவசுந்தரி(வயது16). இவர் நெகமம் அடுத்த சேரிபாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தினமும் பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் வீட்டில் இருந்து பஸ் மூலம் பள்ளிக்கு சென்றார்.
பள்ளிக்கு சென்ற அவர் தனது வகுப்பறையில் காலையில் பாடம் கவனித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவி சிவசுந்தரி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சியாகினர். உடனடியாக ஆசிரியர்கள் உதவியுடன் மாணவியை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.