செய்திகள்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் போலி ஆவணங்களுடன் பணியாற்றிய வங்கதேசத்தினர் 8 பேர் கைது
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வங்கதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் பதுங்கி இருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வங்கதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினர் சிலர் பதுங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவன த்தில் பணியாற்றி வருவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் பனியன் நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 23), ஆலமின்(29), லிட்டான்(30), விப்லான்(30), ரிசிவான்(23), ராணா சப்ரைசி (22), பபுல்அகமத்(33), மோச்சின் அசம்(33) ஆகியோர் என்பதும், அவர்கள் இந்தியாவுக்கான போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பதுங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.